ஆண் பெண்ணாக மாறி ஆண்களிடம் பணம் பறித்த சம்பவம்: யாழ்ப்பாணத்தில் சந்தேக நபர் சிக்கினார்!

கைத்தொலைபேசியில் செயலியை உபயோகித்து பெண் குரலில் பேசி ஏமாற்றி, ஆண்களிடம் பணம் பறித்த குற்றச்சாட்டில் வட்டுக்கோட்டை கிழக்கைச் சேரந்த 26 வயது இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வைத்து இன்று (25) யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுன்னாகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வந்த கைத்தொலைபேசி அழைப்பில் பெண் ஒருவர் உரையாடியுள்ளார். அதன்பின்னர் அவர்கள் தொடர்ச்சியாக உரையாடியுள்ளனர். பின்னர் அவர்கள் அந்தரங்கப் படங்களைப் பரிமாறிக் கொண்டுள்ளனர்.

அதன் பின்னர் கைத்தொலைபேசியில் பேசிய பெண், அந்த நபரை மிரட்டி ஒன்றரை இலட்சம் ரூபா பறித்துள்ளார். அதன் பின்னரும் மிரட்டி ஒரு இலட்சம் ரூபா கேட்டுள்ளார. இதனால் சந்தேகமடைந்த அந்த நபர், இது தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட புலனாய்வுப் பிரிவுப் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்

கைத்தொலைபேசியில் பேசிய பெண்ணிடம், வங்கியில் பணம் வைப்புச் செய்ய முடியாது என்றும், நேரில் வந்து பெற்றுக் கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பணத்தைப் பெற்றுக் கொள்ள வந்த 26 வயது இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்

விசாரணையில் அந்த இளைஞரே பெண் குரலில் பேசி ஏமாற்றியமை தெரிய வந்துள்ளது. இந்த இளைஞர் ஏற்கனவே நால்வரிடம் இவ்வாறு பேசி சுமார் நான்கு இலட்சம் ரூபாவுக்கும் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது என்று பொலிஸார் கூறுகின்றனர்.

கைது செய்யப்பட்ட இளைஞரிடமிருந்து நான்கு கைத்தொலைபேசிகளும் ஒரு இலட்சம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன.

விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.