ஐந்தாயிரம் ரூபா பணத்திற்காக யாழில் நடந்த கொலை! பகீர் தகவலை வெளியிட்ட காவல்துறை

காங்கேசன்துறை, கீரிமலைப் பகுதியில் வீடொன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது.

கீரிமலை, புதிய கொலனியில் வசிக்கும் 63 வயதுடைய ச. நடராசா என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

வெளிமாவட்டத்தைச் சேர்ந்த இவர் கடந்த 20 ஆண்டுகளாக கீரிமலையில் வசித்து வருகின்றார்.

நேற்று அவர் வீட்டில் நினைவிழந்திருந்த நிலையில் காணப்பட்டதாக அவரை தெல்லிப்பழை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர். பரிசோதனைகளை மேற்கொண்ட மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மரணத்தின் பின்னணி
இந்த மரணத்தில் காங்கேசன்துறைப் காவல்துறையினர் சந்தேகம் கொண்டதால், உடற்கூற்றுப் பரிசோதனை நடத்தப்பட்டது.

உடற்கூற்றுப் பரிசோதனையில் இவர் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் காங்கேசந்துறை பிராந்திய காவல் புலனாய்வு பிரிவினரின் தகவலை அடுத்து இன்று 42 மற்றும் 62 வயதுடைய சந்தேகநபர்கள் இருவரைக் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

5 ஆயிரம் ரூபா பணம் திருடப்பட்டமை தொடர்பாக எழுந்த முரண்பாடு ஒன்றை அடுத்தே இந்தக் கொலை நடந்துள்ளது என்பது முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது என காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன என காங்கேசன்துறை காவல்துறையினர் தெரிவித்தனர்.