யாழ் ஐ.ஓ.சி நிலையத்தில் இன்று எரிபொருள் விநியோகம்: யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் விடுத்துள்ள அவசர அறிவிப்பு

யாழ் ஐஓசி நிலையத்தில் விநியோகம்
அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோர் இன்று காலை 11:00 மணி வரை யாழ் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் நிற்க வேண்டாம் என யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார்.

அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோரில் ஒரு தொகுதியினருக்கான எரிபொருள் விநியோகம் யாழ்ப்பாணம் ஐ.ஓ.சி எரிபொருள் நிலையத்தில் விநியோகிக்கப்பட உள்ளதாக யாழ் மாவட்டம் மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் அறிவித்திருந்தார்.

எனினும் அத்தியாவசிய சேவைகளுக்கான விநியோகம் காலை 11 மணி முதல் விநியோகிப்பதற்குரிய ஏற்பாடுகளை யாழ் மாவட்ட செயலகம் ராணுவத்தினருடன் இணைந்து முன்னெடுத்துள்ளது.

பொதுமக்களுக்கான எரிபொருள்
எனவே காலை 11:00 மணி வரை யாழ் மாவட்ட செயலத்தினால் புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்ட நடைமுறைக்கு அமைவாக பொதுமக்களுக்கான எரிபொருள் விநியோகம் இடம் பெறும் என குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களுக்கான விநியோகம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் ஒரு தொகுதியினருக்கான எரிபொருள் விநியோகம் இடம்பெறும் என யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் அறிவித்துள்ளார்

எனவே காலை 11:00 மணி வரை அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோர் வரிசைகளில் வந்து நிற்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவித்துள்ளார்.

முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள்
இதேவேளை மாவட்ட செயலகத்தில் தமது எரிபொருள் பெறுவதற்கான கோரிக்கையை முன் வைத்தோரில் ஒரு பகுதியினருக்கு முன்னுரிமை அடிப்படையில் அவர்களுடைய கோரிக்கை கடிதத்தில் குறிக்கப்பட்ட தொலைபேசி இலக்கங்களுக்கு இன்று காலை மாவட்ட செயலக உத்தியோகத்தர்களால் அறிவிக்கப்பட்ட பின்னர் அவர்களுக்குரிய எரிபொருள் பற்றுச்சீட்டு (டோக்கன்) வழங்கப்பட்டு எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்படவுள்ளது.

பற்றுச்சீட்டு (டோக்கன்) பெற்றுக் கொள்ளாத எவருக்கும் இன்றைய தினம் எரிபொருள் வழங்கப்பட மாட்டாது எனவும் அறிவித்துள்ளார்.