சேமித்து வைக்கப்பட்ட பெற்றொலில் தீ பிடிப்பு; வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட தம்பதியினர்! யாழில் பெரும் சோகம்

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை நெடியகாடு பகுதி ஏஜிஏ ஒழுங்கையில் உள்ள வீடொன்றில் கணவனும் மனைவியும் தீக்காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் சடலமாக கண்டறியப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை 4.15 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அங்கு சரவணபவா ரஞ்சித்குமார் (வயது 30) அவரது மனைவி கிருசாந்தினி (வயது 26) என்ற இருவருமே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

விசாரணை

தம்பதி உறங்கிய அறையில் தீ பற்றி எரிவதைக் கண்டு வீட்டிலிருந்தவர் அறையை உடைத்து உள்நுழைந்த போது இருவரும் தீயில் எரிந்து சடலமாகக் காணப்பட்டுள்ளனர் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மின் ஒழுக்கு ஏற்பட்டதையடுத்து படுக்கை அறையில் சேமித்து வைத்திருந்த பெற்றோலில் தீ பற்றியதால் தூக்கத்திலிருந்த கணவனும் மனைவியும் தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு சம்பவ இடத்தில் இடம்பெற்ற தடயவியல் விசாரணை மற்றும் உடற்கூற்று பரிசோதனையின் பின் அறிக்கையிடப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் இடம்பெற்ற தடயவியல் விசாரணையில் அறையில் மின் ஒழுக்கு ஏற்பட்டமை மற்றும் பெற்றொல் பரவியமை தொடர்பில் கண்டறியப்பட்டன.

உயிரிழந்த மனைவியின் கையில் அலைபேசி சார்ஜர் வயர் இருந்துள்ளமை மீட்கப்பட்டது.

இன்று மாலை மந்திகை ஆதார மருத்துவமனையில் இடம்பெற்ற உடற்கூற்று விசாரணையில் தீக் காயங்களுக்கு உள்ளாகியமையினால் உயிரிழந்துள்ளனர். சந்தேகப்படும் வகையில் உடல்களில் அடி காயங்கள் இல்லை என்று அறிக்கையிடப்பட்டுள்ளது.

“கணவனின் அலைபேசி கொழும்பில் தவறவிடப்பட்டது. அதனால் அவர் சீனாவின் தயாரிப்பிலான அலைபேசி ஒன்றை கொள்வனவு செய்துள்ளார். அந்த அலைபேசி வெப்பமாகி அல்லது சார்ஜர் வெப்பமாகி தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம். படுக்கை அறையில் பெரிய கானிலும் போத்தலிலும் பெற்றோல் சேமித்து வைக்கப்பட்டிருந்துள்ளன.”

என்று தடயவியல் விசாரணையில் அறிக்கையிடப்பட்டுள்ளது.