இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கோவிட்: உயர் அதிகாரிகளுடன் மோடி முக்கிய ஆலோசனை!

இந்தியாவில் மீண்டும் கோவிட் பரவல் அதிகரித்துள்ள நிலையில், டெல்லியில் இந்தியப் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார்.

டெல்லியில் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுடன் இன்றைய தினம் (22.03.2023) நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், கோவிட் பரவலைத் தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்துப் பேசப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியா முழுவதும் ஆயிரத்து 134 பேருக்குப் புதிதாக கோவிட் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக கோவிட்டினால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 26 ஆக அதிகரித்துள்ளது.

கோவிட் உயிரிழப்புகள்
இவ்வாறு இந்தியாவில் கோவிட் பரவல் வேகம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், 24 மணிநேரத்தில் 5 பேர் கோவிட்டினால் உயிரிழந்துள்ளனர்.

குறிப்பாக டெல்லி, சத்தீஸ்கர், குஜராத், மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் கோவிட் உயிரிழப்புகள் பதிவாகி உள்ளன. தினசரி கோவிட் பரவலின் வீதமும் 1.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், டெல்லியில் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று மாலை ஆலோசனை நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.