விடுதிக்கு அழைத்து சென்று மாணவி பாலியல் வன்புணர்வு – ஆசிரியர் கைது!

மாணவியொருவரை விடுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம், அம்பாந்தோட்டை – மயூரபுர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

மாணவியின் தந்தை வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், அம்பாந்தோட்டை துறைமுக காவல்துறையினரால் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாணவி பாலியல் வன்புணர்வு

கடந்த 28 ம் திகதி பாடசாலைக்குச் செல்வதாகக் கூறிச்சென்ற குறித்த சிறுமி வீடு திரும்பாததால் அவரது தந்தை இது குறித்து விசாரித்துள்ளார்.

மாணவி பல்லகஸ்வெவ சந்தியில் மகிழுந்து ஒன்றில் ஏறிச் செல்வதைக் சிலர் கண்டதாக தந்தைக்கு கூறியுள்ளனர்.

இந்தநிலையில், மாணவியைத் தேடி பெற்றோர் பல்லகஸ்வெவ சந்திக்கு சென்றபோது, ​​அவர் வீடு திரும்பியுள்ளார்.

மாணவி வாக்குமூலம்

பின்னர், மாணவியிடம் நடத்திய விசாரணையின்போது, ஆசிரியர் ஒருவர் தன்னை விடுதியொன்றுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்ததாக மாணவி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

பின்னர் காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய பாடசாலை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.