ராக்ஸ்டார் ரமணியம்மாள் காலமானார்; ரசிகர்கள் அதிர்ச்சி

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமான, பின்னணி பாடகி ரமணியம்மாள் இன்று காலமானார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சரிகமப இசை நிகழ்ச்சியில் ரமணி பாட்டி வெற்றி பெற்று மக்களின் மனதில் இடம் பெற்றவர்.

சாதனைகளுக்கு வயது ஒரு பொருட்டல்ல
தன் 63 வயதில் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் புகழ் வெளிச்சம் பெற்ற ராக்ஸ்டார் ரமணியம்மாள், சாதனைகளுக்கு வயது ஒரு பொருட்டல்ல என உணர்த்தி பலருக்கும் உத்வேகமாகத் திகழ்ந்தார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் நிகழ்ச்சி நடுவர்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரையும் அசத்தி ’ராக்ஸ்டார்’ எனும் அடைமொழியைப் பெற்று அவ்வாறே அதுமுதல் அழைக்கப்பட்டு வருகிறார்.

நடிகரும் மறைந்த முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் பாடல்களைப் பாடி சரிகமபா நிகழ்ச்சி மூலம் தமிழ்நாட்டு ரசிகர்களைக் கவர்ந்த ரமணியம்மாள், அதனைத் தொடர்ந்து புகழ் வெளிச்சத்துக்கு வந்தார்.

தொடர்ந்து ஜூங்கா, சண்டைக்கோழி 2, காப்பான் உள்ளிட்ட படங்களில் பாடியுள்ளார். இறுதியாக யோகி பாபு நடித்த பொம்மை நாயகி படத்திலும் ராக் ஸ்டார் ரமணியம்மாளின் பாடல் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில் அவரது மறைவுக்கு பலரும் இரங்கல்களை தெரிவித்து வரும்m நிலையில் ராக்ஸ்டார் ரமணியம்மாள் மறைந்த தகவல் அவரது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.