வெட்டி எறிந்த கையை பொருத்தி சாதனை படைத்த மருத்துவர்கள் (படங்கள்)

4 மணிநேர சத்திர சிகிச்சையின் பின்னர் வெட்டி எறியப்பட்ட கையை வெற்றிகரமாக பொருத்தியதாக கேகாலை பொது வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

கேகாலை எரபந்துபிட்டிய பிரதேசத்தில் உறவினர்களுக்கிடையிலான தகராறு எல்லை மீறி சென்றதையடுத்து 21 வயதான பெண் மீது மன்னா கத்தியால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த தாக்குதலில் பெண்ணின் இடது கையின் கீழ் பகுதி துண்டிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

துண்டிக்கப்பட்ட கையின் பாகம்

எனினும், துண்டிக்கப்பட்ட கையின் பாகம் ஐஸ் பையில் வைக்கப்பட்டு யுவதி உடனடியாக கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடனடியாக செயற்பட்ட கேகாலை பொது வைத்தியசாலையின் விசேட சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் ஆனந்த ஜயவர்தன உள்ளிட்ட வைத்தியர்கள் குழுவினர் உடலிலிருந்து பிரிந்த கையை பொருத்த சத்திர சிகிச்சையை ஆரம்பித்தனர்.

வெற்றிகரமாகப் பொருத்தப்பட்ட கை

சத்திரசிகிச்சையின் பின்னர் யுவதி கேகாலை பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், யுவதியின் நிலைமை படிப்படியாக முன்னேற்றமடைந்து வருவதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.