யாழில் திவிரமடையும் தொற்று; மக்களே அவதானம்!

யாழ். குடாநாட்டில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட 5 பேர் இனம் காணப்பட்ட நிலையில் அவர்களை தனிமைப்படுத்தல் விடுதியில் வைத்து ஒட்சிசன் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

காய்ச்சலுக்கு சிகிச்சை
பருத்தித்துறை ஆதார மருத்துவமனைக்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெறச் சென்ற ஒருவருக்குக் கொரோனாத் தொற்றுக்குரிய அறிகுறி காணப்பட்டதையடுத்து அவருக்குச் சோதனை மேற்கொள்ளப்பட்டதில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக விடுதிகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு கொரோனாப் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது சிலர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து அனைவரும் தனிமைப்படுத்தல் விடுதியில் வைத்து சிகிச்சை பெற்று வருகின்றதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. கொரோனாவின் திரிபு வைரஸால் இத்தகைய பாதிப்பு உருவாகியிருந்தது.

அதேபோன்று தற்போதும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில் 5 பேருக்கு ஒட்சிசன் வழங்கப்பட்டு வருகின்றதாகவும் அவர்களில் ஒருவரது உடல் நிலை மோசமாக உள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

பரிசோதனைகளை செய்யவேண்டாம்
அதேவேளை யாழ்.மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், எழுமாற்று பரிசோதனைகளை செய்யவேண்டாம் என சுற்றறிக்கை வெளியிட்ப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் யாழ் மாவட்டத்தில் அண்மையில் ஒரே நாளில் மூன்று கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் குறித்த செய்தி ஊடகங்களில் வெளிவந்தது.

கொழும்பிலிருந்து விடுக்கப்பட்ட அறிவுறுத்தலின் பிரகாரம் கொவிட் பரிசோதனைகளை செய்ய வேண்டாம் என்ற அறிவுறுத்தல் சுகாதாரத் தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் தினமும் யாழ்.போதனை வைத்தியசாலைக்கு சில அறிகுறிகளுடன் நோயாளர்கள் வருகைதரும் நிலையில் கொவிட் தொற்று அதிகளவில் பரவி இருக்கலாம் என்ற சந்தேகங்கள் எழுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் தெரிவிகின்றன.