பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிராக போராட்டம்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு எதிரான ஊடகவியலாளர்களின் போராட்டம் எதிர்வரும் 29ஆம் திகதி சனிக்கிழமை கிளிநொச்சியில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்

“தற்போது இலங்கை அரசு முன்வைத்துள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் சட்டமாக்கப்பட்டால் ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகத்துறைக்கு மிகப்பெரும் ஆபத்து ஏற்படும். ஊடகவியலாளர்கள் தங்களது கடமைகளைச் சுதந்திரமாக மேற்கொள்ளவது என்பது கேள்விக்குள்ளாகும்.

எனவே குறித்த சட்டமூலத்துக்கு எதிராகக் கிளிநொச்சி ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 29ஆம் சனிக்கிழமை காலை 9 மணிக்குக் கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு முன்பாக எதிர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளோம். அதற்கு வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஊடக அமைப்புக்களின் ஆதரவையும் கோரி நிற்கின்றோம்.” என்றுள்ளது.