எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள பேருந்து கட்டண மீளாய்வின் போது பேருந்து கட்டணத்தில் திருத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 15 ரூபாவினால் டீசல் விலை குறைக்கப்பட்டதாகவும், ஜூலை 1 ஆம் திகதி பேருந்து கட்டணத்தை மீளாய்வு செய்யும் போது அதற்கான பலனை வழங்க அரசாங்கம் வற்புறுத்துவதாகவும் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்தார்.
டீசல் விலை குறைக்கப்படாத போதிலும்
நேற்றையதினம் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை திருத்தத்தில் டீசல் விலையில் குறைப்பு மேற்கொள்ளப்படாதபோதிலும் கடந்த மாதம் டீசல் விலை குறைக்கப்பட்டதை கருத்தில் கொண்டு பேருந்து கட்டணத்தை திருத்த தயாராக உள்ளதாக அவர் கூறினார்.
பேருந்து கட்டணங்களில் திருத்தம்
மேலும் பொருட்களின் விலைகள், உதிரிப்பாகங்களின் விலைகள் மற்றும் இதர பொருட்களின் விலைகள் கணக்கிடப்பட்டு, ஜூலை 1-ம் திகதி பேருந்து கட்டணங்கள் திருத்தம் செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.