கொழும்பு – யாழ். தொடருந்து சேவை மீண்டும் ஆரம்பம்

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான தொடருந்து சேவை ஜூலை மாதம் 15 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

திருத்த வேலை காரணமாக கொழும்பு – யாழ். தொடருந்து சேவை, ஜனவரி 5 ஆம் திகதி முதல் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

மேலும், குறித்த திருத்த வேலைகள் முடிந்த பின்னர் காங்கேசன்துறையில் இருந்து அநுராதபுரத்திற்கு மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் தொடருந்துகள் பயணிக்க முடியும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

வடக்கு தொடருந்து சேவை

வடக்கு தொடருந்து மார்க்கத்தின் அநுராதபுரம் முதல் ஓமந்தை வரையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரையான நேரடி தொடருந்து சேவை அநுராதபுரம் தொடருந்து நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

வடக்கு தொடருந்து மார்க்க திருத்தப் பணிகளுக்கு இந்திய அரசு நிதி உதவி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் எதிர்வரும் 15 ஆம் திகதி வடக்கு தொடருந்து சேவையை மீள ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.