சுமார் ஒரு வருட காலமாக பதினைந்து வயது பாடசாலை மாணவி ஒருவரை அவ்வப்போது பாரிய பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் மாரவில காவல் பிரிவிற்குட்பட்ட கத்தோலிக்க தேவாலயத்தின் பொறுப்பதிகாரி ஒருவரை கைது செய்ய மாரவில தலைமையக காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யத் தேடப்படும் சந்தேகத்திற்குரிய அருட் தந்தை தலைமறைவாக உள்ளதாக உயர் காவல்துறை அதிகாரி ஒருவர் கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்தார்.
நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சி
கைது செய்ய தேடப்பட்டு வரும் இந்த சந்தேகத்திற்குரிய அருட்தந்தை நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சிப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பான தகவல் அறிக்கை மாரவில நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் நாட்டை விட்டு தப்பிச் சென்றால் அவரை கைது செய்யுமாறு உத்தரவும் பெறப்பட்டுள்ளதாகவும் உயர்மட்ட காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காவல்துறை மா அதிபரிடம் முறைப்பாடு
பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக கூறப்படும் இந்த மாணவியின் பெற்றோருக்கு இது தெரியவந்ததையடுத்து, அவர்கள் காவல்துறை மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிடம் முறைப்பாடு செய்துள்ளதாக காவல்துறை தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காவல்துறை மா அதிபரின் உத்தரவின் பேரில் மாரவில தலைமையக காவல் பிரிவின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் இது தொடர்பில் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.