அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் மீளப்பெறப்படும் – செஹான் சேமசிங்க பிறப்பித்த உத்தரவு

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளுக்காக தவறான தகவல்களை வழங்கி பணத்தை பெற்றுக்கொள்பவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதுவரை முறைகேடான வகையில் பெற்றுக்கொண்ட நலன்புரி கொடுப்பனவுகள் அனைத்தும் மீள அறவிடப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

அஸ்வெசும நலன்புரித் திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

சட்ட நடவடிக்கை

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அஸ்வெசும நலன்புரித்திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 15 இலட்சம் பயனாளர்களில் வங்கி வைப்பு உள்ளிட்ட சரியான தகவல்களை வழங்கிய 8 இலட்ச பயனாளர்களுக்கு கடந்த மாதத்துக்கான கொடுப்பனவுகளை வழங்க திறைச்சேரி 5 பில்லியன் ரூபாவை சகல அரச வங்கிகளுக்கும் விடுவித்துள்ளது.

அரச வங்கிகளின் பிரதானிகளுடன் விசேட பேச்சு வார்த்தையில் ஈடுபடவுள்ளோம். பயனாளர்கள் எவ்வித அசௌகரியங்களும் இல்லாமல் கொடுப்பனவுகளை வழங்குவதற்கான பிரத்தியேக வழிமுறைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தவுள்ளோம்.

இந்த நிலையில், தவறான தகவல்களை வழங்கி நலன்புரி கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்பவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதுவரை காலமும் முறைகேடான வகையில் பெற்றுக்கொண்ட கொடுப்பனவுகள் அனைத்தும் மீண்டும் அறவிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.