நல்லூர் திருவிழாவில் இரு வயதுப் பெண் குழந்தை மாயம்! பொலிஸார் விடுத்த அவசர கோரிக்கை

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலய திருவிழாவில் வவுனியாவை நேர்ந்த சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் திருவிழாவில் கலந்து கொண்டிருந்த பிருத்தி அஸ்விகா எனும் இரண்டு வயது சிறுமியே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நல்லூர் கந்தனின் தீர்த்த திருவிழாவான நேற்றையதினமே குறித்த சிறுமி காணாமல் போயுள்ளதாகவும் சிறுமியை மீட்டுத் தருமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா, செட்டிக்குளத்தைச் சேர்ந்த தம்பதியின் குழந்தையையே காணவில்லை என்று முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறுமியின் பெற்றோர் நல்லூர் திருவிழாக் காலத்தில் யாசகம் பெறுவதற்காக வவுனியா செட்டிக்குளத்தில் இருந்து யாழ்ப்பாணம் வந்துள்ளனர்.

நேற்று நல்லூர் ஆலயப் பின்புற வீதியில் சிறுமி இறுதியாகப் பெற்றோருடன் இருந்துள்ளார். அதன்பின்னர் சிறுமியைக் காணவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சிறுமியை கண்டவர்கள் உடனடியாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.