மக்களின் வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ள பணம்: மகிந்த அமரவீர தகவல்

இம்முறை பெரும் போகத்திற்கான உர கொள்முதல் செய்வதற்காக 1200 கோடி ரூபாயை விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்க அரசு முடிவு செய்துள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கை தேசிய விவசாயிகள் அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் 25 மாவட்ட தலைவர்களை நேற்று(21.09.2023) சந்தித்து விவசாயிகளின் பிரச்சினைகளை கேட்டறிந்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும், ஒரு ஹெக்டேர் நெல் செய்கைக்கு 15,000 ரூபா வீதம் விவசாயிகளுக்கு பணம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

1200 கோடி ரூபா ஒதுக்கீடு
உரக் கொள்வனவுக்கான மானியமாக அரசாங்கத்திடம் இருந்து பெறப்படும் இந்தப் பணத்தில் விவசாயிகள் தமது விருப்பத்திற்கேற்ப இரசாயன உரங்களையோ அல்லது பயிற்செய்கைக்கு ஏற்ற உரங்களையோ கொள்வனவு செய்ய முடியும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இம்முறையும் அரசாங்க உர நிறுவனங்களினால் ஒரு மூட்டை யூரியா உரம் 9000 ரூபாவிற்கு வழங்கப்படும் எனவும், அதே விலையில் விவசாயிகளுக்கு யூரியா உரத்தை வழங்க தனியார் துறையும் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டில் தற்போது நிலவும் நிதி நெருக்கடியை கருத்தில் கொண்டு உர மானியமாக 1200 கோடி ரூபாவை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் இதனை விட அதிக தொகையை வழங்க முடியுமாயின் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.