எங்களை மட்டும் ஏன் குறி வைக்கிறீர்கள்…! கடும் கோபமடைந்த ரணில்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான சர்வதேச விசாரணையை நிராகரித்த நிலையில், Deutsche Welle உடனான நேர்காணலில் இருந்து வெளியேறுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரித்த சம்பவம் பதிவாகியுள்ளது.

பல்வேறு கட்டங்களில் அவர் தமது பொறுமையை இழந்த நிலையில் பேசியுள்ளமையும் தெரியவந்துள்ளது.

இலங்கையை மேற்கத்தைய நாடுகள், இரண்டாம் வகுப்பாக பார்க்கிறதா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

ஒரு கட்டத்தில், நேர்காண்பவர் ‘முட்டாள்தனமாக பேசுகிறார்’ என்று அவர் குற்றம் சாட்டியதுடன், போர் தொடர்பாக கூட சர்வதேச கண்காணிப்பாளர்களின் தேவையை இலங்கை எதிர்ப்பார்க்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க ஒரு கட்டத்தில், நேர்காணலை நிறுத்துமாறும் பரிந்துரைத்துள்ளார்.

மேலும் நேர்காணலின் போது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் தாம் கர்தினால் மல்கம் ரஞ்சித்தை தொடர்பு கொள்ளவில்லை என்றும் கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டுடன் மாத்திரமே தொடர்பு கொண்டதாகவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

முதலாம் இணைப்பு
சர்வதேச விசாரணையை முன்னெடுப்பதில் இலங்கைக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. ஆனால் சர்வதேச விசாரணை வட்டத்தில் எங்களை மட்டும் குறி வைப்பது ஏன்? என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேள்வியெழுப்பியுள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரிடம், இலங்கையின் அரசியல் விவகாரங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை முன்னெடுப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இந்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சர்வதேச விசாரணை
அதில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சர்வதேச விசாரணையை முன்னெடுப்பதில் இலங்கைக்கு எந்த பிரச்சினையும் இல்லை, ஆனால் சர்வதேச விசாரணை வட்டத்தில் எங்களை மட்டும் குறி வைப்பது ஏன்?

இப்படி சம்பவம் அமெரிக்காவிலோ அல்லது வேறு மேற்கு நாடுகளிலோ இடம்பெற்றால் அந்த நாடுகளில் சர்வதேச விசாரணையை கேட்பீர்களா?, ஆசியர்களாகிய எம்மை மட்டும் இரண்டாம் தர பிரஜைகளாக பார்க்கிறீர்களா ? அவ்வாறான கேள்வியை ஏன் கேட்கிறீர்கள்?” என ஜனாதிபதி ரணில் கேள்வி எழுப்பியுள்ளார்.

கேள்வி கேட்க அழைத்துவிட்டு, எங்களை சிறுமைப்படுத்துவது மேற்கத்திய நாடுகளின் மனநிலையை வெளிப்படுத்துகிறது.

மக்கள் நம்பிக்கை இல்லை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தாங்கள் அமைத்துள்ள விசாரணைக்குழுவில் மக்கள் நம்பிக்கை கொள்ளவில்லை என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு,

”மக்களுக்கு அதைப்பற்றி நாம் தெரிவிப்போம் நீர் யார் அதை கேட்பதற்கு?” என கடும் தொனியில் பதிலளித்துள்ளார்.

உண்மையான தரவுகள் இல்லமால், மனித உரிமை மீறப்படுவதாக குற்றச்சாட்டை முன்வைக்கப்படுகிறது.

அதை ஒருபோதும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என கூறியுள்ளார்.

சர்வதேச சமூகத்தின் கோரிக்கைகளுக்கு ஏற்ப உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அதை உரிய முறையில் தெரியப்படுத்தவும், வெளிவிவகார அமைச்சர் இந்த விவகாரம் தொடர்பில் சர்வதேச சமூகத்துடன் ஆலோசனை முன்னெடுத்தும் வருகிறார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.