வடக்கு கிழக்கில் ஹர்த்தாலை புறக்கணித்த மாணவர்கள்!

வடக்கு கிழக்கில் இன்று ஹர்த்தால் அறிவிக்கப்பட்ட போதிலும் பாடசாலைகள் வழமை போன்று இடம்பெறுவதாக கூறப்படுகின்றது.

பாடசாலைகளில் 2ம் தவணை பரீட்சைகள் இடம்பெற்று வரும் நிலையில் மாணவர்கள் பாடசாலைக்கு செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

அதேவேளை வழமை போல பேருந்துகளும் சேவையில் ஈடுபட்டு வருகின்றதை அவதானிக்க முடிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை, குருந்தூர்மலை உள்ளிட்ட விவகாரங்களில் தீர்ப்பை மாற்றியெழுதுமாறு அழுத்தம் வழங்கப்பட்டமை ஆகியவற்றைக் கண்டித்தும், நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியும், கிழக்கில் தமிழர்களின் வாழ்விடங்கள், பொருளாதார வளங்கள், மேய்ச்சல் தரைகள் சிங்களக் குழுக்களால் அபகரிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் இன்றையதினம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்நிலையில் வடக்கு மற்றும் கிழக்கு மாஹாணங்களில் பூரண கர்த்தாலுக்கு தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், பொது முடக்கத்தை முன்னிட்டு பாடசாலை நடவடிக்கைகள் அனைத்தையும் இன்று (20) புறக்கணிக்குமாறு தமிழ் கட்சிகள் கூட்டாக விடுத்தமை குறிப்பிடத்தக்கது.