டிக் டொக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை

டிக் டொக் செயலியின் ஊடாக சமூக நல்லிணக்கத்திற்குக் கேடு விளைவிக்கும் செயல்கள் அதிகரித்துள்ளதாக தெரியவந்ததையடுத்து அதனை நேபாள அரசு தடை செய்ய முடிவு செய்துள்ளது.

சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும், ‘பைட் டான்ஸ்’ என்ற நிறுவனம், டிக் டொக் என்ற சமூக வலைத்தள செயலியை உருவாக்கியது.

இந்த செயலி உலகம் முழுவதும் செயல்பட்டு வந்தது. இந்த செயலி நாட்டின் பாதுகாப்புக்கும், தனிப்பட்ட நபர்களின் தரவுகளுக்கும் உரிய பாதுகாப்பின்மை இருப்பதாகக் கூறி இந்தியா, அமெரிக்கா, அவுஸ்ரேலியா உட்பட பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளன.

குற்றச்சாட்டு
அதனை தொடர்ந்து, சமூக நல்லிணக்கத்திற்குக் கேடு விளைவிக்கும் செயல்கள் அதிகரித்துள்ளதாக, நேபாள அரசு கண்டறிந்துள்ளது.

மேலும், சமீபகாலமாக இந்தச் செயலியின் மூலமாக பல்வேறு மதத்தினர் இடையே வெறுப்புணர்வு தூண்டும் வகையில் காணொளிகள் பதிவிட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதனால், பிரதமர் புஷ்ப கமல் பிரசண்டா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், டிக் டொக் செயலிக்குத் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.