யாழில் பெரும் சோகம்! க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு குறைவால் மாணவி எடுத்த தவறான முடிவு

கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு குறைவால் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த மாணவி நேற்று(05.12.2023) காலை 11 மணிக்கு அவரது வீட்டில் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கடந்த வாரம் வெளியாகிய சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவி ஒருவர் குறைவான பெறுபேற்றினை பெற்றதாக தெரிவித்த பெற்றோர் குறித்த மாணவியை கண்டித்துள்ளனர்.

இதனையடுத்து, குறித்த மாணவி தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

வாலை அம்மன் வீதி, அராலி கிழக்கினைச் சேர்ந்த 17 வயதான சிவகுமார் பானுப்பிரியா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரணம் விசாரணை அதிகாரி மேற்கொண்ட நிலையில் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் அவரது சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.