யாழ் போதனா வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனையில் வெளிவரும் அதிர்ச்சி தகவல்!

யாழில் அண்மைக் காலமாக அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையால், நுரையீரல் மற்றும் இருதய “வால்வு” ஆகியவற்றில் பாதிப்பு ஏற்பட்டு யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அவ்வாறு வருபவர்களில் பெருமளவானோர் 25 வயதிற்கும் குறைந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாடுகளுக்கு செல்வதற்காக, இளையோர் பலர் மருத்துவ சான்றிதழ்களை பெற்றுக்கொள்வதற்காக யாழ்பாண போதனா வைத்தியசாலைக்கு மருத்துவ பரிசோதனைக்காக வருகின்றனர்.

அவர்களிடம் பரிசோதனைகளை மேற்கொள்ளும் போது, நுரையீரல் மற்றும் இருதய வால்வு ஆகியவற்றில் கிருமி தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அது குறித்து அவர்களிடம் பெற்றுக்கொண்ட தகவலின் அடிப்படையில அவர்கள் ஊசி மூலம் போதைப்பொருளை நுகர்வது கண்டறியப்பட்டது.

இதேவேளை, சுவாசிக்க முடியாமல் சிரமத்துடன், கடும் காய்ச்ச்சலுடனும் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வரும் இளைஞகளுக்கு மேற்கொண்ட பரிசோதனையில் அவர்களுக்கும் இருதய வால்வில் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.

அவர்களும் ஊசி மூலம் போதைப்பொருளை நுகர்பவர்கள். இவ்வாறாக நாளாந்தம் சராசரியாக 3 பேர் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை கடந்த ஒரு ஆண்டில், யாழில் ஊசி மூலமான போதைப்பொருள் நுகர்வினால் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.