அதிகரிக்கவுள்ள பேருந்து கட்டணம்; மக்களுக்கான அதிர்ச்சித் தகவல்!

எதிர்வரும் ஜனவரி மாதத்தில் வெட் வரி அதிகரிப்புடன் பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் எதிர்காலத்தில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

ஜனவரி மாதம் முதல் ஒரு பேருந்து இறக்குமதியின் போது சராசரியாக ஒரு கோடியே ஐம்பத்தேழு இலட்சம் செலவாகும்.

18% VAT வரி அதிகரிப்பால் குறைந்தது இன்னும் 20 இலட்சமாவது அதிகரிக்கும். அந்த தொகைக்கு பேருந்தை கொள்வனவு செய்து வந்து சாதாரண மக்களை ஏற்றிச் செல்ல முடியாமல் பேருந்து உரிமையாளர்கள் திணறி வருகின்றனர்.

இதன்படி சுமார் 3,000 பேருந்துகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அதனுடன், உதிரி பாகங்களின் விலை, எண்ணெய் விலை, சேவைக் கட்டணங்கள் அனைத்தும் அதிகரிக்கின்றன.

எரிபொருள் விலையேற்றம் மிகவும் பாரதூரமான விடயம். எரிபொருளின் மீது VAT மாற்றப்பட்டுள்ளது. அப்போது கண்டிப்பாக டீசல் விலை உயரும்.

இதன்போது மீண்டும் ஒருமுறை பேருந்து கட்டணத்தை உயர்த்தும் நிலை உள்ளது.

விரைவில் ஜனாதிபதி மற்றும் நிதியமைச்சக அதிகாரிகளுடன் இது குறித்து ஆலோசிக்க எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.