800 பயணிகளுடன் வெள்ளத்தில் சிக்கியது ரயில்

தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ரயிலில் பயணம் செய்த 800க்கும் மேற்பட்ட பயணிகள் ரயிலில் சிக்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற ரயிலே வெள்ளத்தில் சிக்கியது.

திருசெந்தூரில் இருந்து சென்னையை நோக்கி 800 பயணிகளுடன் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு புறப்பட்டு சென்றது.

அந்தரத்தில் தொங்கும் ரயில்
இதனிடையே, நேற்று முன்தினம் இரவு முதல் தென் மாவட்டங்கள் முழுவதுமாக பலத்த மழை பெய்து வந்த நிலையில், மேற்கொண்டு போக முடியாமல் ஸ்ரீவைகுண்டத்தில் பாதி வழியிலேயே ரயிலை ஓட்டுநர் நிறுத்திவிட்டார்.

தொடர்ந்து மழை பெய்வதால் ரயில் தண்டவாளத்துக்கு கீழே மண் அரிப்பு ஏற்பட்டு அந்தரத்தில் ரயில் தொங்கி வருகிறது.

இருப்பினும், ரயிலில் பயணம் செய்த கிட்டத்தட்ட 300 பயணிகளை மீட்புக் குழுவினர் காப்பாற்றியுள்ளனர். சீரற்ற காலநிலை காரணமாக நேற்று தற்காலிகமாக நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இன்றைய தினம் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.