யாழிற்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி ரணில்: 8 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல்!

யாழிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜயத்தின் போது அவருக்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்படலாம் என கருதி 8 பேருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பொலிஸாரினால் செவ்வாய்க்கிழமை (02-01-2024) குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் யாழிற்கு விஜயம் செய்து பல்வேறு கலந்துரையாடல்களில் பங்கேற்பதற்காக 4 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரை விஜயம் செய்யவுள்ளார்.

இந்த நிலையில் ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கான போராட்டத்தை தடுக்கும் பொருட்டு தடை கட்டளை கோரி பொலிஸார் நீதிமன்றில் விண்ணப்பித்துள்ளனர்.

இது குறித்து தங்கள் தரப்பு நிலைப்பாட்டினை நேரடியாகவோ, சட்டத்தரணி ஊடாகவோ யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில், புதன்கிழமை (03) முன்னெடுக்குமாறு நீதிமன்றம் பிரதிவாதிகளுக்கு கட்டளையிட்டுள்ளது.

இந்த வழக்கு தாக்கல் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், தவத்திரு வேலன் சுவாமிகள், காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்க பிரதிநிதிகள் என 8 பேருக்கு எதிராகவே செய்யப்பட்டுள்ளது.