இலங்கைப் பொலிஸார் மீது சீன பெண் சரமாரி தாக்குதல்!

வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த சீன பெண் குறித்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்தச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை சீன பெண் ஒருவர் கடுமையாக தாக்கியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து இன்று (20) பிற்பகல் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேருவளை மங்கள மாவத்தையில் வசிக்கும் 36 வயதுடைய சீன பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பேருவளை பொலிஸார் விசாரணை
பேருவளை மங்கள வீதியில் உள்ள வீடொன்றில் சீன பெண் ஒருவர் வீசா இன்றி தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் 2 பொலிஸ் உத்தியோகத்தர்கள் விசாரணைகளை மேற்கொள்ள சென்றிருந்த நிலையில், இங்கு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது தாக்குதலுக்கு உள்ளான 2 பொலிஸ் உத்தியோகத்தர்களும் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேருவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.