யாழில் பொலிஸாரைத் தாக்கிவிட்டு தப்பியோடிய மணல் கடத்தல்காரர்கள்

யாழில் பொலிஸாரை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற மணல் கடத்தல்காரர்கள் இருவர் கைது செய்யப்பட்டதுடன் டிப்பர் வாகனமும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டது.

யாழ்-நுணாவில் பகுதியில் இருந்து சாவகச்சேரி நோக்கி இன்று (06.03.2024) அதிகாலை பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் வாகனத்தை கடமையில் இருந்த சாவகச்சேரி போக்குவரத்து பொலிஸார் மறித்துள்ளனர். எனினும் குறித்த டிப்பர் நிறுத்தாமல் சென்றுள்ளது.

இதனையடுத்து டிப்பர் வாகனத்தை துரத்திச் சென்ற பொலிஸார் சாவகச்சேரி சுற்றுவட்டத்தில் வைத்து அதனை மறித்துள்ளனர்.

இதன்போது டிப்பர் சாரதி மற்றும் டிப்பர் வாகனத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் உட்பட மூவரும் இணைந்து பொலிஸார் மீது இரும்பு கம்பிகளால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதன்போது போது நகரப் பகுதியில் கடமை இருந்து பொலிஸார் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்திய மணல் கடத்தல்காரர்கள் இருவரை கைது செய்தனர்.

எனினும் டிப்பர் வாகனத்திற்கு முன்பாக வழிகாட்டி வந்த ஒருவர் மோட்டார் சைக்கிளை கைவிட்டு தப்பி சென்றுள்ளார்.

சுற்றிவளைப்பு
இதனையடுத்து மணல் கடத்தி வரப்பட்ட டிப்பர் வாகனத்தையும் மோட்டார் சைக்கிளையும் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.