ஒருகோடி ரூபா பெறுமதியான வலம்புரி சங்குடன் சிக்கிய பௌத்த தேரர் உட்பட இருவர் கைது

மாத்தறையில் இருந்து மட்டக்களப்பு விற்பனைக்காக கடத்தி கொண்டுவரப்பட்ட ஒருகோடி ரூபா பெறுமதியன வலம்புரிசங்கு ஒன்றுடன் பௌத்த தேரர் ஒருவர் உட்பட இருவர் மட்டக்களப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (07.03.2024) இரவு மட்டக்களப்பு கல்குடா பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாண்டியடி விசேட அதிரடிப்படைக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பதினமான நேற்று இரவு கல்குடா தபால் கந்தோருக்கு அருகாமையில் கண்காணிப்பில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அங்கு பௌத்த தேரர் உட்பட இருவர் வலம்புரிசங்கு ஒன்றை விற்பனைக்காக கடத்தி வந்ததை அவதானித்த விசேட அதிரடிப்படையினர் அவர்களை சுற்றிவளைத்து கைது செய்ததுடன் ஒரு கோடி ரூபா பெறுமதியான வலம்புரி சங்கு ஒன்றினையும் மீட்டுள்ளனர்.

இதன்போது கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் சான்று பொருளான வலம்புரிசங்கையும் விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளதாவும் இவர்களை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.