வெடுக்குநாறி மலை விவகாரம்! வெள்ளவத்தை கோயிலை இடிக்க முடியுமா – சபையில் சரத் வீரசேகர ஆவேசம்

வெடுக்குநாறிமலையில் பௌத்த தொல்பொருள் மரபுரிமைகள் பொதிந்துள்ளன. வெடுக்குநாறி மலையில் இருந்த பழமையான பௌத்த தூபி இடித்தழிக்கப்பட்டு அதன் மீது சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. நாங்கள் வெள்ளவத்தையில் உள்ள கோயிலை இடித்து பௌத்த வழிபாடுகளில் ஈடுபட முடியுமா என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர சபையில் கோபமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

சிங்கள பௌத்தர்களின் பொறுமையை கோழைத்தனம் என்று கருத வேண்டாம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இன்றையதினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் மேற்கண்வடாறு குறிப்பிட்டார்.
நாங்கள் கோழைகள் அல்ல
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

வெடுக்குநாறி மலை விவகாரத்தை குறிப்பிட்டுக் கொண்டு வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். தெற்கில் உள்ள மத சுதந்திரம் வடக்குக்கும் வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிடுகிறார்.

வடக்கில் மத சுதந்திரம் உள்ளதா ? என்பதை முதலில் ஆராய வேண்டும். வெடுக்குநாறிமலையில் பௌத்த தொல்பொருள் மரபுரிமைகள் பொதிந்துள்ளன. வெடுக்குநாறி மலையில் இருந்த பழமையான பௌத்த தூபி இடித்தழிக்கப்பட்டு அதன் மீது சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

வெள்ளவத்தையில் உள்ள கோயிலை இடித்து பௌத்த வழிபாடுகளில் ஈடுபட முடியுமா? ஆகவே தெரியாத விடயங்களை பற்றி எதிர்க்கட்சித் தலைவர் பேசக் கூடாது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் பிரதிநிதிகள் தமிழ் மக்கள் மத்தியில் இனவாதம் பேசி பிரச்சினைகளை தூண்டி விடுகிறார்கள். பின்னர் கொழும்புக்கு வந்து போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். மீண்டும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு செல்கிறார்கள்.

இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதால் தான் இவர்கள் இவ்வாறு சுதந்திரமாக வாழ்கிறார்கள். பௌத்த தொல்பொருள் மரபுரிகளை அழித்து அதன் மீது பிற மத அடையாளங்களை காட்சிப்படுத்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். சிங்கள பௌத்தர்களின் பொறுமையை கோழைத்தனம் என்று கருத வேண்டாம் என குறிப்பிட்டார்.