இரு மாணவர் தகராறில் பறிபோன உயிர்!

ஹம்பாந்தோட்டை – சிப்பிக்குளம பகுதியில் நேற்று மாலை (05) பாடசாலை மாணவர் ஒருவர், மற்றுமொரு பாடசாலை மாணவரை தாக்கியதில் உயிரிழ்ந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளாகி ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மாணவன் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் ஹம்பாந்தோட்டை, பெத்தேவெல பகுதியில் வசிக்கும் 15 வயதுடைய பாடசாலை மாணவனே உயிரிழந்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை நகரிலுள்ள பாடசாலையொன்றில் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் இவர், நேற்று மேலதிக வகுப்பில் கலந்துகொள்வதற்காக சிப்பிக்குளம பகுதிக்கு சென்றுள்ளார்.
இதன்போது ஹம்பாந்தோட்டையில் உள்ள மற்றுமொரு பாடசாலையைச் சேர்ந்த மாணவர் ஒருவர் , மேலதிக வகுப்புக்கு அருகில் சென்று 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனை தாக்கியுள்ளார்.
இரு மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறே மோதலுக்குக் காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. மாணவனின் மரணம் தொடர்பில் 17 வயதுடைய பாடசாலை மாணவனை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.