இரத்தம் சொட்டச் சொட்ட பொலிஸ் நிலையம் சென்ற நபர் – யாழில் சம்பவம்!

கூரிய ஆயுதமொன்றால் வெட்டப்பட்டு காயமடைந்த நிலையில் இரத்தம் சொட்டச் சொட்ட பாதிக்கப்பட்டவர் நேற்று மாலை நெல்லியடி பொலிஸ் நிலையம் வந்தார்.

அவரைத் தொடர்ந்து அவரை வெட்டிய நபர் கத்தியுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்.
பாதிக்கப்பட்டவர் தன்னை வாளால் வெட்டியதாக முறையிட்டார். ஆனால் வெட்டியவரோ இல்லை-இல்லை கத்தியால் தான் வெட்டினேன் என வாதாடினார்.

இதனையடுத்து கத்தியுடன் சரணடைந்தவரிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர். காயமடைந்தவரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

கரவெட்டி பகுதியில் உறவினர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட மோதலே இவ்வாறு வாள்வெட்டில் முடிந்து பொலிஸ் நிலையம் வரை வந்தது.
பாதிக்கப்பட்ட சுதர்சன் (வயது -30) என்பவரின் தலை, பிடரி, தோள்மூட்டு பகுதிகளில் வெட்டுக் காயங்கள் காணப்பட்டன. இந்தச் சம்பவத்தால் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் நேற்று மாலை சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.