தள்ளு வண்டியில் விற்பனை செய்யப்பட்ட சிற்றுண்டியில் துருப்பிடித்த ஆணி!

மன்னாரில் தள்ளு வண்டியில் விற்பனை செய்யப்பட்ட சிற்றுண்டியில் ஆணி ஒன்று இருந்துள்ளது.

இது குறித்து மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் உரிய ஆதாரங்களுடன் முறையிட்டும் இது வரை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட நபர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மன்னார் செபஸ்ரியார் பேராலய பிரதான வீதியில் கடந்த 18 ஆம் திகதி சனிக்கிழமை இரவு தள்ளு வண்டியில் விற்பனை செய்யப்பட்ட சிற்றுண்டியை, மன்னார் எழுத்தூர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கொள்வனவு செய்து தனது வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளார்.

அன்றைய தினம் இரவு 9.30 மணியளவில் குறித்த சிற்றுண்டியினை வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிட்டுள்ளனர்.

இதன் போது கொள்வனவு செய்யப்பட்ட சிற்றுண்டி ஒன்றில் இருந்து துருப்பிடித்த ஆணி ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது.

இது குறித்து 19 ஆம் திகதி ஆதாரம் மற்றும் எழுத்து மூலம் மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.

எனினும், இது வரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை.

இந்நிலையில், தொடர்ச்சியாக அதிகாரிகள் அசமந்த போக்குடன் நடந்து கொள்ளும் பட்சத்தில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்தும் அதிகரிக்கும் எனவும், இதனால் மக்களே பாதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.