மாணவியிடம் தவறாக நடக்க முயன்றார் என ஆசிரியர் மீது விசாரணை!! – கிளிநொச்சியில் சம்பவம்!!

கிளிநொச்சி பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் மாணவியிடம் ஆசிரியர் ஒருவர் தகாதமுறையில் நடக்க முற்பட்டார் என்று தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் பாடசாலையின் அதிபர் மற்றும் சம்பந்தப்பட்ட ஆசிரியர் ஆகியோரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் சிறுவர் நன்னடத்தை அதிகாரியால் இன்று நடத்தப்பட்டுள்ளன என்று தெரியவருகின்றது.

கிளிநொச்சி – கரைச்சி கல்வி கோட்டத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவியொருவரை அந்தப் பாடசாலையில் கற்பித்தலில் ஈடுபட்டு வரும் ஆசிரியர் ஒருவர் நேற்று பாடசாலை நேரத்தில் தகாத முறையில் நடத்த முற்பட்டார் என்று குற்றஞ்சாட்டப்படுகின்றது.

இந்தச் சம்பவம் தொடர்பில் வகுப்பாசிரியரிடமும் அவரது பெற்றோரிடமும் முறைப்பாடு செய்தார் என்றும், அதைத் தொடர்ந்து குறித்த முறைப்பாடு தொடர்பில் பெற்றோர் பாதிக்கப்பட்ட மாணவி, மற்றும் சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் விசாரணைகளை மேற்கொண்டு சம்பவம் தொடர்பில் வலயக் கல்விப்பணிப்பாளருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் பாடசாலை அதிபரை மேற்கோள்காட்டிச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இன்று காலை 10 மணிக்கு பாடசாலைக்கு சென்ற மாவட்ட சிறுவர் நன்னடத்தை அதிகாரி விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், இது தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.