பேருந்து ஊழியர்கள் நாளை கிளிநொச்சியில் சேவைப் புறக்கணிப்பு!!

கிளிநொச்சி மாவட்டத்தில் நாளை அனைத்துப் பேருந்து ஊழியர்களும் சேவைப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர் என்று மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் நா.நகுலராஜா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி பேரூந்து உரிமையாளர்கள் பாதிப்படையும் வகையில் வட மாகாண போக்குவரத்து அதிகார சபையால் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த சேவைப் புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

வவுனியாவிலிருந்து கிளிநொச்சி வலைப்பாட்டு கிராமத்திற்கு வவுனியா – மாங்குளம் – மல்லாவி ஊடாக பேருந்து சேவை ஒன்றுக்கு அனுமதி வழங்கியமை மற்றும் வவுனியா மாங்குளம் கிளிநொச்சி ஊடாக பூநகரிக்கும் ஒரு பேரூந்து சேவைக்கான அனுமதியை வீதி போக்குவரத்து அதிகார சபையின் பொது முகாமையாளர் வழங்கியுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட பேருந்து உரிமையாளர் பெரும் நெருக்கடிக்குள் மத்தியில் போதுமான சேவையை மீள்குடியேற்றம் காலம் தொடக்கம் வழங்கி வருகின்றார்கள். வலைப்பாடு என்பது ஒரு குறிப்பிட்டளவு மக்களை கொண்ட கிராமம். இந்த கிராமத்துக்கு வீதி போக்குவரத்து அதிகார சபையின் பொது முகாமையாளர் வவுனியாவிலிருந்து நேரடியாக பேருந்து சேவை ஒன்றுக்கு அனுமதி வழங்கியிருப்பது கிளிநொச்சி மாவட்ட பேருந்து உரிமையாளர்களை பெரிதும் பாதிக்கும் செயற்பாடாகும்.

2017 ஆம் ஆண்டுக்கு முன்னுரிமை மாற்றம் செய்யப்பட்ட அனைத்து தற்காலிக வீதி அனுமதி பத்திர உரிமையாளர்களையும் தற்போது உருவாக்கப்பட்ட வீதி போக்குவரத்து அதிகார சபையின் பொது முகாமையாளர் ஒரு இலட்சம் செலுத்த வேண்டும் என அறிவித்துள்ளார்.

இவற்றைக் கண்டித்து நாளை கிளிநொச்சியில் இருந்து இடம்பெறுகின்ற வெளியூர் மற்றும் உள்ளுர் தனியார் போக்குவரத்து பேருந்து ஊழியர்களும் சேவைப் புறக்கணிப்பில் ஈடுப்படவுள்ளனர் என நா.நகுலராஜா தெரிவித்துள்ளார்.