பிள்ளைகளைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று உயிரை விட்ட தாய், தந்தை..!

ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகே, நடுவலசை கிராமத்தைச் சேர்ந்தவர், பெரியசாமி (வயது 70), இவரது மனைவி புஷ்பவள்ளி (வயது 55). இவர்களுக்கு, 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.

பிள்ளைகள் அனைவருக்கும் திருமணம் ஆகி விட்டது. ஒவ்வொருவரும், ஒவ்வொரு ஊரில், தங்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த வயதான தம்பதியினர் மட்டும், அந்தக் கிரமாத்திலேயே, தனியாக வாழ்ந்து வந்தனர்.

முதுமையின் காரணமாக, இந்த இருவருக்கும் அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் போய்க் கொண்டே இருந்திருக்கிறது. இதனால், இவர்கள் இருவரும், அடிக்கடி மருத்துவனைக்குச் சென்று வைத்தியம் பார்த்து வந்தனர். இருந்தாலும், இவர்களுக்கு இருந்த நோய் குணமாகவில்லை.

இதனால், இந்த நோய்களுடன், இருவரும் அவதிப் பட்டு வந்தனர். பிள்ளைகளைத் தொந்தரவு செய்ய வேண்டாம், என்று அவர்களிடத்திலும், எந்த தகவல் சொல்லாமல், தாங்களே சமாளித்துக் கொள்ளலாம் என்றிருந்தனர்.

ஆனாலும், அடிக்கடி இருவருக்குமே, உடல் நலமில்லாமல் போவதால், கவனிக்க ஆள் இன்றி, இருவருமே விரக்தி அடைந்தனர். நேற்று முன் தினம், இருவரும், வீட்டிற்கு முன்பாக, தங்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டனர்.

அவர்களின் அலறல் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இருந்தாலும், அவர்கள் இருவரும் தீயில் கருகி, பலியாகினர். இந்த சம்பவம், அந்த கிராமத்தில் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.