நண்பரின் மரண வீட்டிற்கு சென்ற இளைஞன் உயிரிழந்த சோகம்!

மட்டக்களப்பு – சந்திவெளி ஆற்றில் நேற்று இரவு தோணி கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி இளைஞனொருவர் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

திகிலிவட்டை கிராமத்தில் நண்பரின் மரண வீட்டிற்கு செல்வதற்காக தனது இரு நண்பர்கள் சகிதம் நேற்று இரவு 10 மணியளவில் தோணியில் சந்திவெளி ஆற்றினை கடக்க முற்பட்ட வேளை தோணி கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்ததுடன் ஏனைய இருவரும் உயிர் தப்பியுள்ளனர்.

உயிரிழந்தவர் சந்திவெளி பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்த 21 வயதான யோகராசா ரரிஷன் என அவரது பெற்றோர் அடையாளம்  காட்டியுள்ளனர்.

கடந்த சில தினங்களாக பெய்துவரும் அடை மழை காரணமாக ஆற்றில் நீர் மட்டம் அதிகரித்துள்ளதுடன் ஆற்றுவாழை கரையொதுங்கி காணப்படுகிறது.

குறித்த இளைஞன் ஆற்றுவாழைக்குள் சிக்குண்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.