வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் மீண்டும் குழப்பம்…!! பொலிஸார் பாதுகாப்பு கடமையில்..!!

வவுனியா புதிய பஸ் நிலையத்தில் இன்று யூன் முதலாம் திகதி முதல் இணைந்த பஸ் சேவையை மேற்கொள்வதற்கு வடமாகாணசபையினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த தனியார் பஸ் சென்றபோது இ.போ.ச சாரதிகள் மற்றும் தனியார் பஸ் சாரதிகளிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளதுடன் இணைந்த சேவை மேற்கொள்வதில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.இணைந்த சேவை மேற்கொள்ளுவதற்கான அறிவித்தல் தலைமை அலுவலகத்திலிருந்து வழங்கப்படவில்லை என இ.போ.ச ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

இந் நிலையில் தனியார் , இ.போ.ச பஸ்கள் பஸ் நிலையத்தில் தரித்து நிறுத்தாமல் பஸ் நிலையத்திற்கு முன்பாக (வெளிசெல்லும் பாதையில்) பஸ்களை தரித்து பயணிகளை ஏற்றி வருகின்றனர்.இதன் போது, தனியார் பஸ் ஒன்று பஸ் நிலையத்தில் வெளிச்செல்லும் பாதையூடாக உட்செல்ல முயன்ற சமயத்தில் மீண்டுமொரு குழப்ப நிலை ஏற்பட்டது.

தமது பயணங்களை மேற்கொள்ளச் சென்ற பயணிகள் பெரும் இக்கட்டான நிலையிலுள்ளதுடன், இணைந்சேவை மேற்கொள்வதில் இழுபறி நிலை காணப்படுகின்றது.தற்போது, பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர். எனினும் இது வரை இ.போ.ச , தனியார் பஸ் பிரச்சினை சுமுகநிலைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.