மன்னார் லங்கா சதொச வளாகத்தில் நேற்று ஐந்தாவது நாளாகவும் அகழ்வுப் பணிகள் நடைபெற்றன. நேற்று பெரியளவிலான மனித எலும்பு எச்சங்கள், பற்கள்,தடையப்பொருள்களான பொலித்தீன் பக்கற், சோடா மூடி உள்ளிட்ட சில தடையப்பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
மன்னார் நுழைவாயிலுக்கு அண்மையில் உள்ள லங்கா சதொச வளாகத்தில் மேற்கொள்ளப்படும் கட்டுமானத்துக்காக அகழப்பட்ட மண்ணில் மனித எலும்பு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து அகழப்பட்ட மண்ணிலும், லங்கா சதொச வளாகத்திலும் அகழ்வுப் பணிகள் நடைபெறுகின்றன.
கடந்த 4 நாள்களாக மன்னார் மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா தலைமையில் நடைபெற்றுவரும் அகழ்வுப் பணிகளில் மனித எலும்பு எச்சங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டன.
ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வரும் இடத்தில் நேற்று அங்குலம் அங்குலமாக மேற்கொள்ளப்படும் அகழ்வு பணியில் முழுமையான மனித உருவ எழும்புக் கூடுகள் தென்படாதபோதும் ஆங்காங்கே சிறு சிறு எலும்புகள் பற்கள் தென்படுகின்றன என்று தெரிவிக்கப்படுகின்றது.
சட்ட மருத்துவ அதிகாரி டபிள்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஐபக்ச தலைமையில் நடைபெறும் இந்த அகழ்வுப் பணி காலை ஏழு மணி தொடக்கம் நண்பகல் 12.30 மணியுடன் இடை நிறுத்தப்பட்டது. இன்றும் நாளையும் அகழ்வுப் பணி இடை நிறுத்தப்பட்டுள்ளது எனவும் மீண்டும் திங்கள்கிழமை வழமைபோன்று காலை ஏழு மணிக்கு ஆரம்பிக்கப்படும் என வும் தெரிவிக்கப்பட்டது.