யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் வெற்றிலையுடன் கஞ்சா கொண்டு சென்றார் என்ற குற்றச்சாட்டில் குடும்பப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் யாழ்ப்பாணம் நீதவான் மன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்று சிறைச்சாலைத் தரப்பினர் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் நடந்துள்ளது.
முல்லைத்தீவைச் சேர்ந்த இந்தப் பெண் தனது பதின்மவயது மகளுடன் சிறைச்சாலைக்குச் சென்றுள்ளார். அங்குள்ள தனது கணவரைச் சந்திக்கவே அவர் சென்றுள்ளார். அப்போது வெற்றிலைச் சரையும் கொண்டு சென்றுள்ளார்.
அந்த வெற்றிலைச் சரைக்குள் கஞ்சா இருந்ததைச் சிறை உத்தியோகத்தர்கள் கண்டுபிடித்தனர். அவர் கைது செய்யப்பட்டார்.
அவருடன் வந்த பதின்ம வயது மகள் கடும் இக்கட்டு நிலையை அடைந்தார். என்ன செய்வது?, யாருடன் திரும்புவது என்று தெரியாது அவர் அந்தரித்தார் என்று அங்கிருந்தவர்கள் கூறினர். கைது செய்யப்பட்ட பெண் நீதிமன்றில் நேற்று முற்படுத்தப்பட்டார். அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டது.