முல்லைத்தீவு, செல்வபுரத்தில் கடந்த 23ஆம் திகதி இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் சுன்னாகத்தைச் சேர்ந்தவர் என்று முல்லைத்தீவுப் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 23 ஆம் திகதி செல்வபுரத்தில் உள்ள பனங்கூடல் ஒன்றுக்குள் இளைஞர் ஒருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. கள்ளப்பாடு வடக்கைச் சேர்ந்த வ.சதாநிசன் (வயது – 27) என்பவரே கொலை செய்யப்பட்ட நிலையில் காணப்பட்டார். சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
உடற்கூற்று சோதனையில் தகவல்
சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து உடல் உடற்கூற்றுச் சோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு அனுப்பட்டது. கழுத்தில் கூரிய ஆயுதத்தால் வெட்டப்பட்டு, அதிகளவான குருதிப்போக்கால் உயிரிழப்பு ஏற்பட்டமை மருத்துவ அறிக்கையில் தெரியவந்தது. உயிரிழந்தவரின் வயிற்றில் கடிகாயம் ஒன்று காணப்பட்டது. அது பொலிஸாரின் கவனத்தை ஈர்ந்தது.
துரித விசாரணை
கிடைத்த தகவல்களைக் கொண்டு சிறப்பு பொலிஸ் அணி களத்தில் இறங்கியது. முல்லைத்தீவ மாவட்ட பொலீஸ் அதிகாரி வசந்த கந்தேவத்த, உதவி பொலீஸ் அத்தியட்சகர் மயூரப்பெரேரா தலைப்பொலீஸ் பரிசோதகர் லால் சந்திரசிறி ஆகியோரின் ஆலோசனையுடன், பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி எச்.கே.கங்காநாத் தலைமையில் பொலீஸ் உத்தியோகத்தர்களான சுபாஸ், கருணாரெத்தின, சமரசிங்க, எம்.சுரேன்ராஜ், வாசனா, கே.நிரூயன், ஆர்.கருணாரத்ன, லக்மல் ஆகியோர் கொண்ட அணி விசாரணைளை ஆரம்பித்தது. உயிரிழந்தவரின் உடலில் காணப்பட்ட கடி காயம் தொடர்பில் அவர்கள் அவதானம் செலுத்தினர்.
காட்டிக் கொடுத்த கடிகாயம்
யாரேனும் கடித்தமை தொடர்பாக முறைப்பாடுகள் முன்னர் கிடைத்துள்ளனவா என்பது தொடர்பில் பொலிஸ் குழு தேடுதலை ஆரம்பித்தது. அவர்களுக்கு அதில் ஒரு தகவல் கிடைத்தது. போதையால் ஏற்படும் குடும்பத் தகராறில் கடித்தார் என முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமையை அவர்கள் கண்டறித்தனர். அந்த நபரைப் பொலிஸ் குழு கண்காணிக்க ஆரம்பித்தது.
கைது
செல்வபுரத்தைச் சேர்ந்த அந்த நபரைத் தேடிச் சென்றபோது அவர் அங்கு இல்லை. சந்தேநகபர் முல்லைத்தீவுக்கு வந்துள்ளமை தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது. கண்காணிப்பை அதிகரித்த பொலிஸார் நேற்று முல்லைத்தீவில் இருந்து வட்டுவாகல் பாலம் ஊடாக நடத்து சென்று கொண்டிருந்த சந்தேகநபரை வளைத்துப் பிடித்தனர்.
ஆதாரங்கள் மீட்பு
கைது செய்யப்பட்டவரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் உயிரிழந்த இளைஞனின் தலைக்கவசம், பணப்பை, கொலைக்குப் பயன்படுத்தப்பட்டது என்று கூறப்படும் கத்தி போன்றவற்றை மீட்டுள்ளனர். உயிரிழந்த இளைஞனின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை அறுத்து யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் உள்ள அவரது அக்காவிடம் அடைவு வைத்துத் தருமாறு கூறிக் கொடுத்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.
அக்காவும் கைது
இந்தத் தகவல்களை அடுத்து கொலை மற்றும் களவுக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டில் மின்சார நிலைய வீதி, சுன்னாகத்தில் வசிக்கும் அவரது அக்காவும் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து உயிரிழந்த இளைஞனின் தங்கச் சங்கிலி மீட்கப்பட்டுள்ளது.
மறியல்
இரு சந்தேகநபர்களும் நேற்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். அவர்களை எதிர்வரும் 4 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.