கவலையை கூற தலதா மாளிகைக்கு சென்ற மாணவன்!

மஹியங்கனை – கிராந்துருகோட்டை பிரதேசத்தின் முன்னணி பாடசாலையில் கல்வி கற்கும் மாணவரொருவர் காணாமல் போயிருந்த நிலையில் நேற்று பகல் மீட்கப்பட்டுள்ளார்.

13 வயதான குறித்த சிறுவன் மாலை நேர வகுப்பிற்கு செல்வதாக தெரிவித்து விட்டு நேற்று வீட்டிலிருந்து சென்றுள்ளார்.

எனினும் அவர் அன்றைய தினம் மாலை வீடு திரும்பாத நிலையில் சம்பவம் தொடர்பில் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளனர்.

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தவேளை சிறுவன் மஹியங்கனை பேருந்து நிலையத்திற்கு அருகிலிருந்து மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் சிறுவன் பொலிஸாரிடம் கூறுகையில்,

பெற்றோர் தினமும் படிக்குமாறு கண்டித்ததால் அவர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக மாலை நேர வகுப்பிற்கு செல்வதாக கூறிவிட்டு கண்டி தலதா மாளிகைக்கு சென்று தனது கவலையை கூறி வழிப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், அன்றிரவு தலதா மாளிகைக்கு அருகில் தங்கியிருந்துவிட்டு மஹியங்களை நோக்கி வந்ததுடன், மாலை நேர வகுப்பிற்காக வழங்கப்பட்ட பணத்தை தனது போக்குவரத்து செலவுக்கு உபயோகித்ததாகவும் கூறியுள்ளார்.

இதேவேளை, மாணவன் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.