தேனீர்க் கடையில் தனியாகவிருந்த முதலாளி சுட்டுக் கொலை…!!

தேனீர்கடை முதலாளியான வயோதிபர் மீது இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் அவர் உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.இச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு மட்டக்களப்பு காத்தான்குடி அலியார் சந்தியில் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்துரி ஆராய்ச்சி தெரிவித்தார்.

காத்தான்குடியைச் சேர்ந்த 72 வயதுடைய ஆதம்லெப்பை முகமது ஸ்மையில் என்பவரே இச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் .குறித்த பிரதேசத்தில் தேனீர்கடைய நடாத்திவந்த குறித்த வயோதிபர் தற்போது நோன்பு காலத்தையிட்டு இரவு நேரத்தில் தேனீர் கடையை திறந்து நடத்திவந்துள்ளபோது சம்பவதினம் இரவு 11 மணியளவில், சனநடமாட்டம் இல்லாத நேரத்தில் கடையில் தனியாக இருந்த போது, இவர் மீது இனந்தெரியாதேர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச் சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடிப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.