யாழில் ஜே.சி.பி மூலம் தேர் இழுக்கப்பட்ட காரணம் இதோ : முழுமையான விபரம்..!! (படங்கள்)

வடவரணி கண்ணகை அம்மனிடம் நேரில் சென்று தரிசனம் பெற்றோம் உண்மை நிலை உய்த்துணர்ந்தோம்

வடவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு நேற்று (12) செவ்வாய்க்கிழமை நேரில் சென்றோம்.

அங்கு அண்மையில் நடைபெற்ற தேர்த்திருவிழாவின்போது பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு ஜே.சி.பி இயந்திரத்தால் தேர் இழுக்கப்பட்ட விடயம் தொடர்பான உண்மை நிலையைக் கண்டறியும் நோக்கத்துடன் எமது பயணம் அமைந்திருந்தது.

அப்பிரதேச மக்களுடனும், இளைஞர்களுடனும் உரையாடி விடயங்களைக் கேட்டறிந்தோம். அந்த ஆலய நிர்வாகத்தில் உள்ள சிலரின் எதேட்சாதிகாரப் போக்கினாலேயே ஜே.சி.பி மூலம் தேர் இழுக்கப்பட்ட நிலை ஏற்பட்டிருக்கின்றமை உணரப்பட்டுள்ளது. நிர்வாகம் கூறியமை போன்று தேர் இழுத்தால் மண்ணில் புதையும் என்பது முற்றிலும் பொய்.

இந்த வருடம்தான் (2018) புதிய தேர் செய்யப்பட்டது. 8 ஆம் திருவிழா அன்று தேர் வெள்ளோட்டம் விடப்பட்டது. அன்று பக்தர்களால் தேர் இழுத்துச் செல்லப்பட்டிருக்கின்றது. மண்ணில் புதையவில்லை.

எனினும், தேர்த்திருவிழா அன்று நிர்வாகத்தில் உள்ள சிலர் அங்குள்ள குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பக்தர்களை ஓரம்கட்டுவதற்காக ஜே.சி.பி இயந்திரத்தைக் கொண்டுவந்து தேர் இழுத்திருக்கின்றனர்.

மருத நிலத்தில், மிகவும் அமைதியான சூழலில் அமைந்திருக்கின்ற அந்த ஆலயம் அப்பிரதேச மக்களுக்கு இறைவனால் அருளப்பட்ட கொடை.

அந்தக் கொடையை அவர்கள் அனைவரும் இணைந்து பயன்படுத்தி மகிழ்ச்சியாக வாழும் நிலையை ஏற்படுத்தவேண்டும்.