கண்டியில் 67 வருடங்களான அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த வயோதிப பெண்ணொருவரை பொலிஸார் மீட்டுள்ளனர்.
7 வயதில் இருந்து 67 வருடங்களாக வீட்டின் கூடாரத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த பெண்ணை, பொலிஸார் நேற்று முன்தினம் மீட்டுள்ளனர்.
ஒழுங்காக உணவு, நீர் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் தொடர்பில் நபர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டிற்கமைய அவர் மீட்கப்பட்டுள்ளார்.
மாவவெல்ல, மொல்லிகொட பிரதேசத்தைச் சேர்ந்த வயோதிப பெண்ணை மீட்க பொலிஸார் சென்ற போது, அவர் மயக்கமடைந்த நிலையில் இருந்துள்ளார். உடனடியாக மீட்கப்பட்ட அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இவ்வாறு அடைக்கப்பட்ட பெண் திருமணமாகாத 75 வயதான முத்துமெனிக்கே என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பெற்றோரிடம் இருந்து பிரித்து 7 வயதில் மாவனெல்ல பிரதேத்திற்கு அழைத்து வந்த போதிலும் அவருக்கு கல்வி கற்க அனுமதிக்காமல் வீட்டு வேலை செய்ய விடப்பட்டுள்ளார். திருமணமும் செய்து வைக்காமல் பெண் ஒருவருக்கு வழங்கப்பட வேண்டிய எந்தவொரு வசதியும் அவருக்கு வழங்கப்படவில்லை.
அறைக்குள் அடைக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ள பொலிஸார் முயற்சித்த போதிலும், அவரிடம் வாக்குமூலம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு பெண்ணின் இந்த நிலைமைக்கு காரணமானவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.