பிக்பாஸ் 2 வீட்டில் ஜெயில்… தண்டனை அதிகம்!

தமிழகத்தில் மீண்டும் பிக் பாஸ் ஃபீவர் பற்றத் தொடங்கிவிட்டது. `நல்லவர் யார், கெட்டவர் யார்’ என்று கமல் மிரட்டும் தொனியில் வெளியாகியுள்ள புரொமோ, பிக் பாஸ் ரசிகர்களின் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது.

கடந்த ஆண்டு பிக் பாஸ் வீட்டின் செட், பூந்தமல்லியை அடுத்து ஈ.வி.பி ஃபிலிம் சிட்டியில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்தது. அனைத்து வசதிகளும் அந்த வீட்டுக்குள்ளேயே இருக்கும். இந்தப் பிக் பாஸ் சீஸனிலும் அதே இடத்தில்தான் பிக்பாஸ் வீட்டின் செட் அமைக்கப்பட்டுள்ளது. 60-க்கும் மேற்பட்ட கேமராக்கள் கண்காணிக்கும் அந்த வீட்டுக்குள் 24 மணி நேரம் வசிக்க வருமாறு நம் நிருபர்களுக்கு விஜய் டிவி-யின் அழைப்பு வந்தது.

வீட்டின் அமைப்பில் சின்னச் சின்ன மாற்றங்கள். நாம் பார்த்துப் பழகிய கன்ஃபஷன் ரூமின் கதவு சேர் டிசைனை மட்டும் மொத்தமாக மாற்றியிருக்கிறார்கள். ஆனால், கடந்த சீஸனில் இல்லாத ஒரு பயங்கர கான்செப்டை இந்த சீஸனில் இறக்கியுள்ளது பிக் பாஸ் டீம்.

பிக் பாஸ் வீட்டின் தோட்டத்துக்கு அருகே சிறை போன்ற ஒரு செட்டப் இருக்கிறது. சிறைக்குள் ஒரே ஒரு இரும்புக் கட்டில், வெளிச்சத்துக்கு ஒரு லைட். மெத்தை, போர்வை, ஏசி, ஃபேன் எதுவும் கிடையாது. அவ்வளவுதான் இனி பிக் பாஸ் வீட்டில் பொய் சொல்பவர்களுக்கும் வேலை செய்யாமல் தூங்குபவர்களுக்கும் பிக் பாஸ் சிறையில் அடைத்துப் பூட்டிவிடும் தண்டனை தருவார்கள்.