புலிகளின் பெயரால் ஒரு இனத்தை அழித்தார்கள், இப்போது மதத்தை அழிக்கப் பார்க்கின்றனர்

புலிகளின் பெயரைச் சொல்லி ஒரு இனத்தை அழித்தனர். இப்போது மதத்தின் பெயரினால் மக்களை அழிக்கப் பார்க்கின்றனரோ என்று என வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றிய செயலாளர் கண்டனம் வெளியிடும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

இந்து கலாச்சார பிரதி அமைச்சராக காதர் மஸ்தானை நியமித்தமை கண்டனத்திற்கும் வேதனைக்கும் உரிய விடயம். உடனடியாக மாற்றம் வேண்டும். இல்லை என்றால் விளைவுகள் பாரதூரமானதாக அமையலாம்.

இலங்கையில் இந்துக்களின் பாரம்பரியமானது வரலாற்றுக்காலத்துக்கு முன்னரே இருந்து சாந்துள்ளதென்பது வரலாற்றுச் சான்றாகும்.

மதங்கள் என்பது உணர்வுபூர்வமானவை. அவற்றினை சொல்லினால் செயலினால் நாம் கண்டுகொள்ள முடியாது. ஒவ்வொருவருக்கும் தம் மதங்கள் பெரிதே, அவர்களின் உணர்வுகள் பெரிதே.

அதனை நல்லாட்சி அரசு செய்ய தவறிவிட்டது. மத இணக்கம் எனும் பெயரினால் மக்கள் மனங்களை புண்படுத்திக் கொண்டே இருக்கின்றது.

இனத்தினை அழித்து முடித்தார்கள் இப்போது மதத்தினை அழித்து முடிக்க நினைக்கின்றார்களோ என எண்ணவேண்டியுள்ளது.

இப்போது இந்துமத கலாச்சார பிரதி அமைச்சராக பதவியேற்றுள்ள காதர் மஸ்தான், குருமன்காட்டு சந்தியில் தமிழரின் காணியில் இருந்த மில் காணியினை வாங்கும் போது அதில் கோவிலை இடித்தவர் என்பது அனைவரும் அறிந்த விடயம்.

விக்கிரக வழிபாடுகளை எதிர்க்கின்ற இஸ்லாமியர்களால் எவ்வாறு இந்து சமயத்தை காக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

புலிகளின் பெயரைச் சொல்லி ஒரு இனத்தை அழித்தனர். இப்போது மதத்தின் பெயரினால் மக்களை அழிக்கப் பார்க்கின்றனரோ என்ற சந்தேகம் எழுகின்றது.

மதங்கள் பண்பாடுகளை அழித்தால் அந்த இனம் அழியும் என்பது உலக வரலாற்று உண்மை. அந்த வகையிலே இந்த அமைச்சுப் பதவி வழங்கியமை அனைத்து தமிழ் இனத்தின் ஒருமித்த எதிர்ப்பையும் நாம் வெளியிட்டு கொள்கின்றோம்.

இந்துக்கள் எந்த இனத்தினருடை மதத்தினையும் விமர்சனம் செய்வதோ மதம் பரப்புவதோ கிடையாது. அதனை அனைவரும் விளங்கிக் கொள்ளட்டும்.

ஆக மொத்தத்தில் உடனடியாக பிரதி அமைச்சராக இருக்கின்ற காதர் மஸ்தான் தானாக பதவி விலகினால் சிறந்தது என்றும் வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றிய செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.