நுண் கடன் நிறுவன ஊழியர்கள் தொடர்பில் செய்தி வெளியிட்ட ஊடகவியலாளருக்கு கடும் அச்சுறுத்தல்!!

நுண்கடன் நிதி நிறுவனங்கள் தொடர்பில் ஆர்ப்பாட்ட பேரணியினை ஒளிப்பதிவு செய்த, நுண்கடன் நிதி நிறுவனம் உத்தியோகத்தர்கள் தொடர்பில் செய்தி வெளியிட்ட ஊடகவியலாளருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தாக்கவும் முற்பட்டுள்ளதாக தெரிவித்து குறித்த ஊடகவியலாளர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

நேற்றைய தினம் முல்லைத்தீவு நகரில் நுண் கடன் திட்டங்களுக்கு எதிராகவும், நுண் நிதி நிறுவனங்களுக்கு எதிராகவும் பாதிக்கபட்ட பெண்கள் இணைந்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

இந்தநிலையில் குறித்த கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்களை முல்லைத்தீவு நகரில் இயங்கும் பிரபல நுண் நிதிநிறுவன ஊழியர்கள் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயற்பட்டதாக போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த மக்கள் விசனம் வெளியிட்டிருந்தனர்.

இதனை பதிவு செய்து செய்தியாக வெளியிட்ட முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த ஊடகவியலாளரான கணபதிப்பிள்ளை குமணன் என்பவருக்கு குறித்த புகைப்படம் எடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட நுண் நிதி நிறுவன ஊழியர் ஒருவரால் கொலை அச்சுறுத்தல் விடுக்கபட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த ஊடகவியலாளர் சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.