மல்லாகத்தில் துப்பாக்கிச் சூடு! – ஒருவர் சாவு!! (காணொளி )

யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியில் பொதுமகன் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் பலியாகியுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் கூறுகின்றார். மற்றுமொருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மல்லாகம் சகாயமாதா கோவிலுக்கு அண்மையில் இடம்பெற்ற இந்த அசம்பாவிதத்தால் குறித்த பகுதி பதற்றம் நிறைந்து காணப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இதுகுறித்து தெரியவருவதாவது,

சற்று முன்னர் இடம்பெற்ற இந்த சம்பவத்தால் குறித்த பகுதியில் பதற்ற நிலை தொடர்கிறது. இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,

மல்லாகம் சந்திக்கு அருகாமையிலுள்ள சகாயமாதா கோவிலின் திருவிழா இடம்பெற்றுவரும் நிலையில் குறித்த பகுதியில் இன்று வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வாள்வெட்டை நடத்தினார்கள் என்ற சந்தேகத்தின்பேரில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டினால் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார். மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் பலியானவர் பாக்கியராசா சுதர்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சடலம் தற்பொழுது தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் வாள்வெட்டு இடம்பெற்றமைக்கான அடையாளமாக இரத்தக்கறைகள் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் குறித்த பகுதிக்கு வந்த கொலையுண்டவரின் உறவினர்கள், குறித்த நபர் எவ்வித குற்றச் செயலோடும் தொடர்பற்றவர் என்று கூறுவதாக எமது செய்தியாளர் மேலும் குறிப்பிட்டார்.

சம்பவ இடத்தில் ஸ்ரீலங்கா பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விவரங்கள் விரைவில்….