அரச ஊழியர்களின் சம்பள கட்டமைப்பில் புதிய மாற்றம்

இலங்கையில் அரச சேவையில் புதிய சம்பள கட்டமைப்பொன்றை உடனடியாக அறிமுகப்படுத்த வேண்டுமென்று நிர்வாக அமைச்சின் முன்னாள் செயலாளரும், சிரேஷ்ட நிர்வாக அதிகாரியுமான ஜினசிறி தடல்லகே கூறியுள்ளார்.

சிரேஷ்ட மற்றும் அனுபவம் மிக்க அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று இதற்காக நியமிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர் சிரேஷ்ட நிர்வாக அதிகாரி, வரவு செலவுத் திட்டத்தில் 2006ம் ஆண்டு சம்பளம் தொடர்பான சுற்றறிக்கையின் மூலம் முன்னெடுக்கப்பட்ட வித்தியாசத்திற்கு எந்த அரசாங்கத்தினாலும் தீர்வு வழங்கப்படவில்லை.

இந்த சுற்றறிக்கை காலங்கடந்த ஒன்றாகும். ஓய்வூதிய கொடுப்பனவுப் பிரிவு இதன் காரணமாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது.

ரயில்வே, சுகாதாரம், தபால் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் நிலவும் சம்பள முரண்பாட்டிற்கு இந்த சுற்றறிக்கையே காரணமாக அமைந்திருப்பதாகவும் நிர்வாக அமைச்சின் முன்னாள் செயலாளரும், சிரேஷ்ட நிர்வாக அதிகாரியுமான ஜினசிறி தடல்லகே குறிப்பிட்டுள்ளார்.

அபிவிருத்தித் தேவைக்கு அமைவாக தொழில்நுட்ப பயிற்சித்துறையில் கூடுதலான சம்பள முறையை மேற்கொள்ள வேண்டுமென்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.