படுகொலை செய்யப்பட்ட நிலையில், தாய் மற்றும் மகள் சடலமாக மீட்பு!!

ஹங்வெல்ல, வெலிகன்ன பகுதியில் வெட்டுக்காயங்களுடன் தாய் மற்றும் மகளின் சடலங்களை பொலிஸார் இன்று மீட்டுள்ளனர்.

68 வயதுடைய ரூபசிங்க ஆரச்சிகே மேரி ராணி மற்றும் 38 வயதுடைய செனரத் லியனகே லக்மினி ஶ்ரீயாகாந்தி ஆகியோரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கணவனே, தன் மனைவி மற்றும் மனைவியின் தாய் ஆகியோரை வெட்டிக்கொலை செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த கொலை நேற்று இரவு இடம்பெற்றிருக்கலாம் எனவும், சாமர யசோத பண்டார எனும் நபரே இந்த கொலையை செய்திருக்க கூடும் எனவும் பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் 4 மாத குழந்தையை சடலத்திற்கு அருகில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும், குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து ஹங்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.