மர்மமான முறையில் உயிரிழந்துள்ள காவற்துறை உத்தியோகஸ்தர்

சேவையில் ஈடுபட்டிருந்த வேளையில் காணாமல் போனதன் பின்னர் கலாஓயா – நீலபெம்ம பிரதேசத்தில் இருந்து மீட்கப்பட்ட காவற்துறை உத்தியோகஸ்தரின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக இரண்டு காவற்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சாலியவெவ காவற்துறையின் சிரேஸ்ட அதிகாரியொருவர் எமது செய்தி பிரிவு தொடர்பு கொண்டு வினவிய போது தெரிவித்துள்ளார்.

குறித்த காவற்துறை உத்தியோகஸ்தர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என இதுவரை உறுதியாக தெரியவரவில்லை.

தனது சேவை துப்பாக்கியுடன் கடந்த ஏப்பிரல் 4 ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த அநுராதபுரம் காவற்துறை உத்தியோகஸ்தரின் தலையின் ஒரு பகுதி புத்தளம் – நீலபெம்ம பிரதேசத்திற்கு அருகில் சிறிய குழியொன்றில் இருந்து நேற்று முன்தினம் மீட்கப்பட்டுள்ளது.

பின்னர் அன்றைய தினமே அந்த இடத்தில் இருந்து அவரின் தலை சிதைந்த சடலமும் மீட்கப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

பிரதேசவாசியொருவரின் தகவலுக்கு அமைய அவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.